உழவர் சந்தைக்கு முககவசமின்றி வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

பெரம்பலூரில் உழவர் சந்தைக்கு முககவசமின்றி வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2021-04-11 19:27 GMT
பெரம்பலூர்:

கட்டுப்பாடுகள்
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நேற்று அமாவாசையை முன்னிட்டு சந்தையில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்திடவும், முக கவசம் அணிவதை கட்டாயமாக்கவும் உழவர் சந்தையின் வடக்குப்புற கதவு அடைக்கப்பட்டது.
கபசுர குடிநீர்
மேலும் மேற்குப்புறத்தில் உள்ள நுழைவுவாயில் வழியே பொதுமக்கள் காய்கறி மற்றும் பழங்கள் வாங்கச்செல்ல அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே, முககவசத்துடன் சந்தைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் இன்றி வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் உழவர் சந்தை வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. உழவர் சந்தையில் தினமும் பொதுமக்கள் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்