வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-04-11 19:27 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள அம்மன் நகர், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காமீல்பாஷா. இவரது மனைவி பரிதாபானு (வயது 38). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். காமீல்பாஷா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இதனால் பரிதாபானு தனது குழந்தைகள் மற்றும் மாமனார் சையது முஸ்தபாவுடன் மேட்டுத்தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சையது முஸ்தபா நேற்று முன்தினம் அரும்பாவூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். பரிதாபானு குழந்தைகளுடன் எளம்பலூர் சாலையில் ரெங்கா நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பரிதா பானு நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்