தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டிக்கேட்ட கணவன்-மனைவி உள்பட 3 பேரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு

தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டிக்கேட்ட கணவன்-மனைவி உள்பட 3 பேரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-15 15:55 GMT
மணல்மேடு, 

மணல்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தலைஞாயிறு வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவா. கூலி தொழிலாளியான இவருடைய மனைவி தமயந்தி (வயது 38). சம்பவத்தன்று இரவு தமயந்தி வீட்டின் எதிரே அதே பகுதியை சேர்ந்த கார்த்திநாதன் மற்றும் அவரை சார்ந்த 4 பேர் குடி போதையில் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமயந்தி, சிவா ஆகியோர் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திநாதன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தமயந்தி, சிவா, மற்றும் அவர்களின் உறவினரை இரும்பு பைப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த தமயந்தி, அவருடைய கணவர் சிவா, உறவினர் அறிவழகன் ஆகியோர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து தமயந்தி கொடுத்த புகாரின்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திநாதனின் ஆதரவாளர் சுந்தரபாண்டியன் (27) என்பவரை கைது செய்தனர்.

கார்த்திநாதன், ஆனந்தராஜ், ஆகாஷ் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்