தாளவாடி அருகே கோஷ்டி மோதல்; 2 பேர் கைது

தாளவாடி அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-15 22:55 GMT
தாளவாடி,

தாளவாடி அடுத்த சிக்கள்ளி பேருந்து நிலையத்தில் யுகாதி பண்டிகையையொட்டி ஒரு பிரிவினர் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு பிரிவை சேர்ந்த சிலா் வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பிாிவினர் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பலகையை சுட்டிக்காட்டி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அங்கு வந்த மற்றொரு பிரிவினர் தட்டி கேட்டு உள்ளனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பால்ராஜ், சுரேஷ், சிவசாமி ஆகியோர் காயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இதுகுறித்து 2 பிரிவினரும் கொடுத்த புகாரின் பேரில் தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சந்திரசேகர், நதீஷா ஆகியோரை கைது செய்தனர். இரு பிரிவுகளை சேர்ந்த மொத்தம் 23 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இரு பிரிவினர் மோதல் காரணமாக சிக்கள்ளியில் பதற்றம் நிலவுவதால் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மேலும் செய்திகள்