திருவாரூர் மாவட்டத்தில், 20-ந் தேதி உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உரம் விலை உயர்வை கண்டித்து 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Update: 2021-04-16 13:56 GMT
திருவாரூர், 

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாத மத்திய அரசு தற்போது வேளாண் உற்பத்தி அடிப்படையான ரசாயன உரங்களின் விலையை உயர்த்தி உள்ளது. இதைப்போல மூலப் பொருட்களின் விலைக்கு ஏற்ப உர ஆலைகள் விலையை தீர்மானித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் உத்தரவுப்படியும், மத்திய அரசு உர மானியத்தை குறைத்து கொண்டதாலும் தற்போது டி.ஏ.பி., பொட்டாஸ், காம்ப்ளக்ஸ் உரங்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய அரசு தற்காலிகமாக விலை உயர்வை நிறுத்தி வைப்பதாக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டம்

ஆண்டுதோறும் பயிர் சாகுபடிக்கான ரசாயன உரங்களின் தேவை அதிகரித்து உள்ளது. ஆனால் அதற்கேற்ப உரங்களுக்கான மானிய தொகையை மத்திய அரசு உயர்த்துவதில்லை. இதற்கு மாறாக குறைத்து வருகிறது. எனவே மத்திய அரசு நிரந்தரமாக உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அரசின் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் வேளாண் பயன்பாட்டுக்கான உரங்களையும் சேர்க்க வேண்டும். எனவே உரவிலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், மேலும்

2020-21 ஆண்டுக்கான பயிர் நிவாரணத்தை தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றிய நகர தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்