காஞ்சீபுரம் அருகே வக்கீல் கொலை வழக்கில் 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே வக்கீல் கொலை வழக்கில் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே காரை கிராமம் பஜனைகோவில் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகரசன் (வயது 41). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஜெயசங்கர் (40) என்பவருடன் கடந்த 12-ந்தேதி சென்னையிலிருந்து பெங்களுரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அருகே காரை கிராமத்துக்கு செல்லும் வழியில் சென்ற போது, இருவரையும் ஆட்டோவில் வந்த 3 நபர்கள் கத்தியால் குத்தினர்.
இதில், வழக்கறிஞர் அழகரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அழகரசனின் நண்பர் ஜெயசங்கரும் பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படையும் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலை தொடர்பாக காஞ்சீபுரம் செட்டியார் பேட்டை மேலண்டைத்தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (24), செட்டியார் பேட்டை தமிழரசி நகரை சேர்ந்த ஸ்ரீதர் (23), கோனேரிக்குப்பம் இலுப்பை தோப்பு தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.