மொபட் மீது வாகனம் மோதியதில் வி.சி.க. பிரமுகர் பலி

மொபட் மீது வாகனம் மோதியதில் வி.சி.க. பிரமுகர் இறந்தார்.

Update: 2021-04-18 19:34 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையின் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்தார். சீனிவாசன் நேற்று அதிகாலை மொபட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் சீனிவாசன் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சீனிவாசனின் மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சீனிவாசனுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்