கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி ஆனைமலை புலிகள் காப்பகம் ஆழியாறு அணைக்கு செல்ல தடை

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆழியாறு அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-19 16:05 GMT
பொள்ளாச்சி

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆழியாறு அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆழியாறு அணை 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதை தொடர்ந்து பொள்ளாச்சி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்கா   மூடப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து அறிவிப்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது. 

புலிகள் காப்பகம் 

இதற்கிடையில் அணை, பூங்காவிற்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி மூடப் பட்டது. இதேபோன்று ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, அரசின் வழிகாட்டுதலின்பேரில் ஆழியாறு அணை, மற்றும் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றனர். 

தீவிர கண்காணிப்பு 

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கிய ராஜ் சேவியர் கூறும்போது, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக தங்கும் விடுதிகள் முன்பதிவு உள்ளிட்டவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்