ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை

ஆசனூர் அருகே ஒற்றை யானை வாகனங்களை வழிமறித்தது.;

Update:2021-04-20 02:45 IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதி சாலையில் சுற்றி திரிகின்றன.
அதன்படி நேற்று ஆசனூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் இந்த யானை திண்டுக்கலில்-பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  ஆசனூர் அருகே உள்ள செம்மண்திட்டு என்ற இடத்துக்கு வந்து நின்றது. இதனால் அந்த வழியாக கார், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. யானையை பார்த்ததும் சற்று தூரத்திலேயே வாகன ஓட்டிகள்  தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.
யானை ரோட்டில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. சில நேரம் நடுரோட்டுக்கு சென்று நின்று கொண்டது. சிறிது நேரத்துக்கு பிறகு யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
இதனால் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்