56 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-04-20 18:16 GMT
முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

கலெக்டர் ஆய்வு

முதுகுளத்தூர் அருகே உள்ள புழதிகுளம் மற்றும் முதுகுளத்தூர் வாகைகுளம் ஆகிய பகுதிகளில் பொது சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
 ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது 359 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி

 மாவட்டத்தில் 48 ஆயிரத்து 203 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 8 ஆயிரத்து 539 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 56 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வகையில் 4 கல்லூரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள் என 21 மையங்களில் 1300-க்கும் மேற்பட்ட படுக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கேற்ப இதனை அதிகரித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
 முன்னதாக கலெக்டர் உடைகுளம் கிராமம் மற்றும் முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களின் வீடுகளுக்கு சென்று போதிய சமூக இடைவெளி கடைபிடித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதி குறித்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் இந்திரா உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்