காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 147 வாகனங்கள் பறிமுதல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-04-26 05:43 GMT
காஞ்சீபுரம், 

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுகிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகள் வழக்கம் போல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் காந்தி ரோடு, பஸ் நிலையம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

147 வாகனங்கள் பறிமுதல்

நகரின் அனைத்து பகுதிகளில் போலீசார் பணி அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து விதி மீறிய 147 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்தியவாசிய தேவைகளான பால், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கின. ஓட்டல்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் சட்டம் ஓழுங்கு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே விதிகள் மீறி செயல்பட வேண்டாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கேட்டுகொண்டார்.

ஊரடங்கு நேரத்தில் நகர் முழுவதும் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணி மற்றும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், கபசுர குடிநீர் வழங்கினர். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திய முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்