வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய்- சேய் இறந்த பரிதாபம்

வேலூர், வள்ளலாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது தாய், சேய் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-05-01 12:17 GMT
வேலூர்

வேலூர், வள்ளலாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது தாய், சேய் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்- சேய் சாவு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள பாபுராஜேந்திர பிரசாத் தெருவை சேர்ந்தவர் ராஜா. பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 32). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லாததால் அவர்கள் வேலூர் வள்ளலாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மகாலட்சுமி கர்ப்பமானார்.

இதனை தொடர்ந்து பிரசவத்திற்காக நேற்று மகாலட்சுமியை அந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரவு 10.30 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்துக்கு பின்னர் மகாலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், இறந்த குழந்தையை காண்பிக்கவில்லை என்றும், எங்களிடம் எந்த விதமான கையெழுத்தும் பெறவில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசில் புகார்

இதனைதொடர்ந்து அவர்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், டாக்டர்கள் கவனக்குறைவு காரணமாகவே மகாலட்சுமி மற்றும் அவருடைய குழந்தை இறந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இறந்த மகாலட்சுமி மற்றும் அவரது குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்