மின்வாரிய அலுவலர் மர்ம சாவு

மூலைக்கரைப்பட்டி அருகே மின்வாரிய அலுவலர் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2021-05-01 19:53 GMT
இட்டமொழி, மே:
மூலைக்கரைப்பட்டி அருகே முனைஞ்சிப்பட்டியை அடுத்த கீரன்குளம் சர்ச் தெற்கு தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46). இவர் முனைஞ்சிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு ரெஜினா (42) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த சில நாட்களாக மோகன் பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது. 
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் திரும்பி வரவில்லை. எனவே அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே ஊரில் உள்ள தோட்டத்தில் நேற்று மோகன் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த மோகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மோகன் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்