மதுரையில் ஒரே நாளில் 996 பேர் பாதிப்பு

மதுரையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 715 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.

Update: 2021-05-06 16:50 GMT
மதுரை, மே
மதுரையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 715 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.
கொரோனா வைரஸ்
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. மதுரையிலும் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 7 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 725 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 35 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.
715 பேர் குணம் அடைந்தனர்
இதுபோல், நேற்று 715 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 580 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் அனைவரும் தொடர்ந்து 7 நாட்களுக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றுடன் மதுரையில் இதுவரை 29 ஆயித்து 947 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் பலி
இதனிடையே மதுரையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர், 55, 56 வயது ஆண்கள், 64 வயது பெண் ஆகியோரும், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 55 வயது பெண் ஆகியோர்  கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பாதிப்புடன், வேறு சில நோய் பாதிப்பும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்