கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடிய சிவகங்கை நகரம்

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் சிவகங்கை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-05-06 18:53 GMT
சிவகங்கை,

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் சிவகங்கை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

புதிய கட்டுப்பாடு அமல்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட உத்தரவுகள் ஏற்கனவே அமலில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைவதை அடுத்து நேற்று முதல் காய்கறி, மளிகை மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

வெறிச்சோடிய சிவகங்கை

இதன் காரணமாக சிவகங்கை நகர் பகுதிகளில் நண்பகல் 12 மணிக்கு மளிகை, காய்கறி கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் அடைப்பதற்கு தாமதமானது. சிவகங்கை நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் சோதனை செய்து கடைகளை மூட வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி நேற்று பிற்பகலுக்கு பின்னர் பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூர் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியமான மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.
இதேபோன்று, காளையார்கோவில், இளையான்குடி, திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்