மரக்கடையில் தீ விபத்து

மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2021-05-06 19:31 GMT
மதுரை, மே
மதுரை பை-பாஸ் ரோடு, டி.எஸ்.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் மயில்ராஜ் (வயது 45). இவர் கோச்சடை மேலக்கால் ரோடு பகுதியில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். ஊரடங்கு காரணமாக கடை பூட்டப்பட்டு இருந்த நிலையில் நேற்று மதியம் கடையில் இருந்து புகை வருவதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
சிறிது நேரத்தில் கடையில் இருந்து தீ பற்றி எரிய தொடங்கியது. 
உடனே இது குறித்து தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி வினோத் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
கடையில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க தொடங்கினர். காய்ந்த மரக்கட்டைகள் அதிகம் இருந்ததால் தீ வேகமாக கடை முழுவதும் பரவியது. சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். 
இந்த சம்பவத்தால் கடையில் இருந்த மரக்கட்டைகள், கதவு, ஜன்னல்கள், கட்டில்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இது குறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்