ராமநகர் அருகே வீட்டில் மதுபானம் விற்ற வாலிபர் கைது

ராமநகர் அருகே வீட்டில் மதுபானம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-07 13:50 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமநகர் மாவட்டம் கனகபுராவில் ஊரடங்கை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கலால்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், கனகபுரா தாலுகா உள்ள தோரே பேகுப்பாவில் உள்ள ஒரு வீட்டில் மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு விற்பதற்காக மதுபான பாட்டில்கள் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டு உரிமையாளர் மஞ்சுநாத் (வயது 36) கைது செய்யப்பட்டார். இவர், ஊரடங்கை பயன்படுத்தி கொண்டு தன்னுடைய வீட்டிலேயே மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதித்தது தெரிய வந்தது. கைதான மஞ்சுநாத்திடம் இருந்து 18 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது கனகபுரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்