கொரோனா தொற்றால் இறந்தவரின் உறவினர்கள் மறியல். உடலை சுடுகாட்டில் இறக்கிவைத்து விட்டு சென்றதால் ஆத்திரம்

ஆற்காடு அருகே கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல், சுடுகாட்டில் இறக்கிவைத்து விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-07 19:00 GMT
ஆற்காடு-

கொரோனா தொற்றால் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 80). இவர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சகுந்தலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். 

இறந்த அவரது உடலை சுகாதார பணியாளர்கள் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி வந்து முப்பதுவெட்டி சுடுகாட்டில் இறக்கி வைத்துவிட்டு சென்று விட்டனர். புதைப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆற்காட்டில் இருந்து செய்யார் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் மற்றும் தாசில்தார் காமாட்சி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சகுந்தலாவின் உடலைப் புதைப்பதற்கு ஏற்பாடுகளை செய்தனர். இந்த திடீர் சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்