குமரியில் மின்னல் வேகத்தில் பரவுகிறது கொரோனா

குமரி மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 819 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-08 19:29 GMT
நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 819 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
819 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. முதல்கட்ட அலையின் போது 200-க்குள்ளாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டாவது கட்டத்தில் 300, 400 ஆக அதிகரிக்க தொடங்கி, கடந்த சில நாட்களாக 500-ஐ தாண்டியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டம் மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது நேற்று முன்தினம் ஒரேநாளில் 819 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 806 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள 819 பேரில் 450 பேர் ஆண்கள், 369 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 31 சிறுவர்களும் அடங்குவர். இந்த 819 பேருடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.
13 பேர் பலி
பாதிப்பு எண்ணிக்கையை போன்று குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களாக இறப்பு எண்ணிக்கை பத்துக்கும் மேலாக இருந்து வருகிறது. இதே போல் நேற்று முன்தினமும் 13 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்