இருகுடும்பத்தினர் மோதலில் கறி கடைக்காரர் கொலை

மதுரையில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தினர் மோதிக்கொண்டனர். இதில் இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-05-19 19:55 GMT
மதுரை,மே.20-
மதுரையில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தினர் மோதிக்கொண்டனர். இதில் இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்டார்.
ேமாதல்
மதுரை அவனியாபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் சிவசாமி (வயது 58), இறைச்சி கடை நடத்தி வந்தார். 
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயபாலன். இவர்களது வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக அவர்கள் இரு குடும்பத்தினரும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் அந்த இடத்தில் ஜெயபாலனின் மகன் காசிராஜன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த சிவசாமி அதனை தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து கொண்டிருந்த சிவசாமி மனைவியை ஜெயபாலன் அவதூறாக திட்டியுள்ளார்.
கறிக்கடைக்காரர் கொலை
அதனை தட்டி கேட்ட போது ஜெயபாலனின் மகன்கள் பாண்டியராஜன், காசிராஜன், செல்வராஜன், சின்னராஜன் ஆகியோர் அரிவாளால் சிவசாமியை வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த சிவசாமியின் மகன் சிவக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 
 சிவசாமியை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அவனியாபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது
மேலும் சம்பவம் குறித்து ஜெயபாலன் மற்றும் அவரது மகன்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் அந்தப்பகுதியில் மறைந்திருந்த பாண்டியராஜன், செல்வராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்