பெருந்துறை அருகே விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூலிகை ரசம்

பெருந்துறை அருகே விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூலிகை ரசம் வழங்கப்பட்டது.

Update: 2021-05-19 22:15 GMT
பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டம்பாளையத்தில், ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில், நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் தினக்கூலி, வாரக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக, தற்போது விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டிலேயே உள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க ஆயிக்கவுண்டம்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் பக்தர்கள் மூலிகை ரசம் தயாரிக்க முடிவு செய்தனர். அதன்படி கொன்றை, சங்கை, தூதுவளை, தும்பை, வாத நாராயணன், இருவாச்சி, சுக்கு, மிளகு, சித்தரத்தை, சீரகம், புளி ஆகிய 11 மூலிகை பொருட்கள் மூலம் பெரிய அளவிலான பாத்திரங்களை கொண்டு மூலிகை ரசத்தை தயாரித்தனர். பின்னர் அதை கடந்த 3 வாரங்களாக வீடு வீடாக கொண்டு சென்று, விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். 

மேலும் செய்திகள்