கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியானார்கள். புதிதாக 854 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

Update: 2021-05-20 16:53 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 40 ஆயிரத்து 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில், புதிதாக 854 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
இவர்களில் ஆந்திரா, சென்னை, கன்னியாகுமரியில் இருந்து அண்ணாகிராமம், கடலூர், பண்ருட்டி ஆகிய இடங்களுக்கு வந்த 4 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரைச் சேர்ந்த நோயாளிக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 188 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 661 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 858 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றிருந்தனர். நேற்று 284 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் வரை 416 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று 5 பேர் பலியாகியுள்ளனர். இதன் விவரம் வருமாறு:-

5 பேர் பலி

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 65 வயது மூதாட்டி வேலூர் மருத்துவமனையிலும், விருத்தாசலத்தைச் சேர்ந்த 50 வயது பெண் அங்குள்ள அரசு மருத்துவமனையிலும், சிதம்பரத்தை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கடலூரைச் சேர்ந்த 64 வயது முதியவர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 60 வயது முதியவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 பேரும் உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 421 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதித்த 5,733 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 852 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கட்டுப்பாட்டுப் பகுதி 89 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்