வால்பாறை பெரியார் நகரில் ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்

வால்பாறை பெரியார் நகரில் ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-05-20 17:16 GMT
வால்பாறை

வால்பாறை பெரியார் நகரில் ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

பெரியார் நகர் 

வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு செல்லும் வழியில் உருளிக்கல் எஸ்டேட் அருகே பெரியார் நகர் உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. 

சாலையோரம் மற்றும் தேயிலை தோட்டத்தின் கீழ்ப்பகுதியில் குடியிருப்பு உள்ளதால், அங்கு ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. 

இந்த மரங்கள் அதிக உயரத்தில் வளர்ந்து குடியிருப்பு பகுதி மற்றும் சாலையை நோக்கி வளைந்த நிலையில் காணப்படுகிறது. 

இவ்வாறு ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களால், இங்கு மழை பெய்யும்போது முறிந்து வீடுகளின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

ஆபத்தான மரங்கள் 

கடந்த வாரத்தில் பெய்த மழை காரணமாக இந்தப்பகுதியில் ஆபத்தான முறையில் இருந்த மரங்கள் முறிந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதனால் 3 நாட்களாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இதுபோன்றுதான் மழை பெய்யும்போது யூகலிப்டஸ் மரங்கள் விழுந்து சேதமாகி வருகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. 

இதற்கிடையே அடுத்த மாதம் முதல் இந்த பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். அந்த நேரத்தில் இதுபோன்ற ஆபத்தான மரங்கள் முறிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. 

அகற்ற வேண்டும் 

எனவே வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் உரிய கணக்கெடுப்பு நடத்தி, பெரியார் நகர் சாலை யோரத்தில்  ஒட்டி ஆபத்தான முறையில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

 இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்