காஞ்சீபுரத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு

காஞ்சீபுரத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு.

Update: 2021-05-29 01:04 GMT
காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. காஞ்சீபுரம் பெருநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அவரவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர கால உதவிகளை மேற்கொள்ள இந்த முழு ஊரடங்கு காலத்தில் பெரு நகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் பெரு நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன் ஓர் பகுதியாக காஞ்சீபுரம் வெள்ளைக்குளம் பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அரசின் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து வெள்ளைக்குளம் பகுதியிலுள்ள மின்சார தகன மேடையிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி என்ஜினீயர் அருள்ஜோதி, நகராட்சி ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்