ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-06-05 21:13 GMT
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த 24-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 நிலையான சோதனைச்சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 275 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 35 பேர் மீதும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 889 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து 875 இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்