ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்; ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-06-06 20:37 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இ-பதிவு முறை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த வருகிற 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதேசமயம் ஈரோடு மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் 13 நிலையான சோதனை சாவடிகளும், 42 கூடுதல் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தின் அனைத்து எல்லை பகுதிகளிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீசார் சோதனைக்கு பிறகு இ-பதிவு முறையில் பதிவு செய்த வாகனங்களுக்கு மட்டும் மாவட்டத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாகனங்கள் பறிமுதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்ததாக 974 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 912 இரு சக்கர வாகனங்கள், 23 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.4 லட்சத்து 76 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முக கவசம் அணியாமல் சென்ற 330 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. ஊரடங்கை மீறியதாக கடந்த 2 வாரங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரூ.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ காரணங்களுக்காக வெளியில் வாகனங்களில் செல்வதால் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் மருத்துவ சேவைக்காக செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இ-பதிவு பெற்று இருந்தால் மட்டுமே வாகனங்கள் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளித்து அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்