சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது 2 பேர் காயம்

சென்னிமலை அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார் கவிழ்ந்தது. 2 பேர் காயமடைந்தார்கள்.

Update: 2021-06-09 15:50 GMT
சென்னிமலை பாண்டியன் வீதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 56). இவரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் பொன்னுசாமி (வயது 48) என்பவரும் நேற்று மாலையில் ஒரு காரில் சென்னிமலையில் இருந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை செந்தில்நாதன் ஓட்டி சென்றார்.
சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் சிறுக்களஞ்சி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி செந்தில்நாதனும், பொன்னுசாமியும் லேசான காயம் அடைந்தனர். காரில் இருந்த மூட்டைகள் சிதறின. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் செந்தில்நாதனும், பொன்னுசாமியும் 600 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை சென்னிமலையில் இருந்து கடத்தி ஊத்துக்குளியில் உள்ள ஒரு தனியார் மில்லுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து உணவு குடிமை பொருள் பாதுகாப்பு துறைக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்