அந்தியூர் அருகே பரிதாபம் கார் கவிழ்ந்து அரசு அதிகாரி பலி நண்பர் படுகாயம்
அந்தியூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் அரசு அதிகாரி பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
அந்தியூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் அரசு அதிகாரி பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
அரசு அதிகாரி
ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இதேபோல் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் மற்றொரு கார்த்திக் (30). இவர் கார்த்திக்கின் நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் சென்னையில் தங்கியிருந்து அரசு பயிற்சி மையத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்.
கார்த்திக் அவ்வப்போது சென்னையில் இருந்து பவானிசாகருக்கு வந்து செல்வார். அதேபோல் அவர் நேற்று முன்தினம் தனது நண்பர் கார்த்திக்குடன் சென்னையில் இருந்து புறப்பட்டு அந்தியூர் வழியாக பவானிசாகருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.
விபத்தில் சாவு
அந்தியூர் மேட்டூர் ரோட்டில் மறவன் குட்டை பிரிவு என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணி அளவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பவானிசாகரை சேர்ந்த கார்த்திக் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த மற்றொரு கார்த்திக் படுகாயம் அடைந்தார்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கதறல்
படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த கார்த்திக்குக்கு ஷர்மிளா என்ற மனைவி உள்ளார்.
அவரது உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.