கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்கு நடுவே மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-14 22:18 GMT
சத்தியமங்கலம்
கர்நாடக மாநிலத்தில் இருந்து வெங்காய மூட்டைகளுக்கு நடுவே மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மது கடத்தல்
தமிழகத்தில் ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு சிலர் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் மதுவை கடத்தி தமிழகத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீசார் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் தினமும் வாகன சோதனை நடத்தி மது கடத்தலை தடுத்து வருகிறார்கள். 
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் திப்புசுல்தான் ரோட்டில் உள்ள வரதபாளையம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
டிரைவர் கைது
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதை சோதனை செய்தபோது அதில் வெங்காய மூட்டைகள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த மூட்டைகள் ஒவ்வொன்றையும் கீழே இறக்கி வைத்து பார்த்தபோது உள்ளே 10 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சரக்கு வேன் டிரைவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (வயது 28) என்பதும், அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை சரக்கு வேனில் வெங்காய மூட்டைகளுக்கு நடுவே வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்