அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு- நண்பர் படுகாயம்

அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-06-15 22:13 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார். 
அரசு பஸ் டிரைவர்கள்
அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் நாடார் வீதியைச் சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் அன்பழகன் (வயது 46). இதேபோல் ஒட்டபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (36). இருவரும் நண்பர்கள். இதில் அன்பழகன் அன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையிலும், சதீஷ் பவானி பணிமனையிலும் டிரைவர்களாக பணியாற்றி வந்தார்கள். 
இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை அன்பழகனுக்கு முதுகுவலி ஏற்பட்டதால், தர்மபுரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு காரில் சென்றார். அவருடன் சதீசும் சென்றிருந்தார். காரை அன்பழகன் ஓட்டினார்.
இறந்தார்
டாக்டரை பார்த்தபின்னர் இருவரும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்கள். இரவு 7.30 மணி அளவில் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி அண்ணாநகர் என்ற இடத்தில் கார் வந்துகொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டு ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் அன்பழகன், சதீஷ் இருவரும் படுகாயம் அடைந்தார்கள்.
 சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அன்பழகன் இறந்துவிட்டார்.
கண்ணீர்
 சதீஷ் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த அன்பழகனுக்கு ஜீவரேகா (40) என்ற மனைவியும், நந்திதா (15), மேகா (12) என்ற 2 மகள்களும், ஹரிஷ் (5) என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அன்பழகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

மேலும் செய்திகள்