மதுரை,ஜூன்.
மதுரையில் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதிச்சியம் வைகை ஆற்றுக்குள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே மதிச்சியம் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் மதிச்சியம், ஆழ்வார்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மீனாட்சிசுந்தரம் (வயது 21), மணிகண்டன் (19) உள்ளிட்ட 4 பேர் என்பதும், இவர்கள் செக்காணுரணியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் தெரிவித்த இடத்தில் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.