பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.60 அடியாக உயர்வு
பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.60 அடியாக உயர்ந்தது.;
பவானிசாகர்
பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.60 அடியாக உயர்ந்தது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்மட்டம் உயர்வு
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 842 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 90.51 அடியாக இருந்தது.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 218 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 91.60 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.