ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 15 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 870 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 870 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-20 21:18 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 870 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
870 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வரும் நிலையில், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த 2 மாவட்டங்களிலும் தற்போது அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் 904 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 870 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 658 ஆக உயர்ந்தது.
15 பேர் பலி
இதற்கிடையில் கொரோனாவுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண் கடந்த 4-ந்தேதியும், 75 வயது மூதாட்டி, 47 வயது பெண் மற்றும் 85 வயது மூதாட்டி ஆகியோர் 8-ந் தேதியும், 57 வயது ஆண், 60 வயது பெண் ஆகியோர் 9-ந் தேதியும், 80 வயது மூதாட்டி, 62 வயது முதியவர் ஆகியோர் 10-ந் தேதியும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும் 69 வயது மூதாட்டி கடந்த 11-ந்தேதியும், 75 வயது முதியவர் மற்றும் 80 வயது மூதாட்டி ஆகியோர் 12-ந் தேதியும், 77 வயது முதியவர் 15-ந் தேதியும், 46 வயது ஆண் 16-ந் தேதியும் 69 வயது பெண் 18-ந் தேதியும், 38 வயது ஆண் நேற்று முன்தினமும் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 546 ஆக உயர்ந்தது.
8,326 பேர் சிகிச்சை
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,451 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 786 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 8 ஆயிரத்து 326 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்