காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் பொதுமக்களையும் காய்கறி வாங்க அனுமதிக்க வேண்டும் வியாபாரிகள் கோரிக்கை

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-23 02:48 GMT
காஞ்சீபுரம், 

தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளால் கொரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இந்த நிலையில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக இயங்கிவந்த காய்கறி சந்தையானது தற்போது வழக்கமான ரெயில்வே சாலையிலுள்ள ராஜாஜி மார்கெட் பகுதியிலேயே இயக்கப்படுகிறது.

இந்த சந்தையின் இருபக்க கதவுகளும் அடைக்கப்பட்டு சிறு வியாபாரிகள், குறு வியாபாரிகள் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே சென்று காய்கறி, மளிகை பொருட்கள் மொத்த விலையில் வாங்கி வர முடியும்.

பொதுமக்கள் சென்று மேற்கண்ட பொருட்களை வாங்க தடை விதிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறு வியாபாரிகள் மட்டுமே பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுவது லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பொது போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்களும் காய்கறி சந்தைக்கு உள்ளே சென்று பொருள்களை வாங்க அனுமதிக்க வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்