தலையில் கல்லைப்போட்டு தாய் கொலை

சொத்து தகராறில் தாயின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-02 19:31 GMT
பேரையூர்,ஜூலை
சொத்து தகராறில் தாயின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். 
சொத்து தகராறு
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி லீலாவதி (வயது 65). இவர்களுக்கு ஜெயக்குமார் (45) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மாரியப்பன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஜெயக்குமார் திருப்பூரில் டெய்லராக வேலை செய்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பூரில் வேலை இல்லாததால் மேலப்பட்டியில் இருந்து வந்தார். இந்த நிலையில், பூர்வீக சொத்து சம்பந்தமாக ஜெயக்குமார் தனது தாயார் லீலாவதியுடன் அடிக்கடி பிரச்சினை செய்துள்ளார்.
கொலை
நேற்று காலையில் சொத்து சம்பந்தமாக தாய், மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.. இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் தனது தாயார் லீலாவதியை கீழே தள்ளி விட்டு அவர்மீது பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளார்.
 இதில் லீலாவதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 
இது குறித்து அக்கம்பக்கத்தினர், பேரையூர் போலீசாருக்கு தகவல் கூறினர். உடனே சம்பவ இடத்துக்கு பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரோஜா, இன்ஸ்பெக்டர் ராஜ சுலோச்சனா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். லீலாவதியின் உடலை பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து தகராறில் பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்