சிறுவன், சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் நகை திருட்டு

படப்பை அருகே சிறுவன், சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் நகை திருடப்பட்டது.

Update: 2021-07-18 23:54 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் பிரதான சாலை எட்டையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). தாம்பரம் ஜி.எஸ்.டி. ரோடு கடப்பேரியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உஷாராணி ( 32) இவர்களுக்கு திவாகர் (13) என்ற மகனும் விஷ்ணு பிரியா (11) என்ற மகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார்கள் இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.

மகன், மகள் இருவரும் மதிய நேரத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவர்களிடம் உங்கள் தந்தைக்கு ரூ.1½ லட்சம் கொடுக்கவேண்டும். அவரிடம் பேசிவிட்டேன்.

நகை திருட்டு

நீங்கள் பீரோவை காட்டுங்கள் நான் பணத்தை வைத்து விட்டு செல்கிறேன் என்று கூறி அவர்களை ஏமாற்றி நூதன முறையில் பீரோவில் இருந்த நகையை திருடி சென்றுள்ளார். வேலைக்கு சென்ற கணவன் மனைவி இருவரும் இரவு வீட்டுக்கு வந்த பிறகு இந்த தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். பீரோவை சோதனை செய்தபோது 4 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து சோமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் மணிகண்டன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சோமங்கலம் போலீசார் திருட்டு சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து விசாரணை செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்