கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீக்காயம்

கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

Update: 2021-07-20 21:15 GMT
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள சாய தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீபிரியா (30).  கடந்த 10   ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு பிரார்த்தனா என்ற 1½ வயது குழந்தையும் உள்ளது.  
குடிப்பழக்கம்
சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடிபோதைக்கு அடிமையான சரவணன் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு சரவணன் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஸ்ரீபிரியா மனமுடைந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடலில் பற்றி எரிந்ததும் கருகிய நிலையில் அவர் அலறி துடித்தார். அவருடைய சத்தம் கேட்டு சரவணன் ஓடி வந்து ஸ்ரீபிரியாவை காப்பாற்ற முயன்று உள்ளார். இதில் சரவணனுக்கும் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. 
சாவு
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரின் உடல்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் இதில் ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த சரவணன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்