தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; கோபி அருகே பரபரப்பு

கோபி அருகே தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-21 20:54 GMT
கடத்தூர்
கோபி அருகே தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட உடையாம்பாளையம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு இதுவரை முறையாக தடுப்பூசி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 50 பேருக்கு டோக்கன் வழங்குவதாக ஊராட்சி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால் காலையில் 10 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்க முடியும் என கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஈரோடு-கோபி ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியல் குறித்து தகவல் கிடைத்ததும், கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகளிடம் பேசி அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஆவன செய்வதாக கூறினார்.  அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஈரோடு-கோபி ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்