உத்திரமேரூர் அருகே 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய லகுலீசர் சிலை கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய லகுலீசர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-07-23 04:44 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து உத்திரமேரூர் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சைவ சமயத்தின் ஒரு பிரிவான லகுலீச பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்றாய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:-

லகுலம் என்றால் தடி. ஈசம் என்றால் ஈஸ்வரன் தடியை கொண்டு சைவ சமயத்தை பரப்ப சிவபெருமானே மனித உருவில் 28-வது அவதாரமாக உருவெடுத்தது லகுலீசர் என்பதாகும்.

சைவ சமயத்தின் முக்கிய பிரிவான பாசுபதத்தில் இருந்து இந்த லகுலீசர் பாசுபதம் தோன்றியது. கி.பி. 2-ம் நூற்றாண்டில் குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டத்தில் காரஹன் என்னும் இடத்தில் தோன்றி தமிழகத்தில் 3-ம் நூற்றாண்டுக்கு பிறகு வேர்விட தொடங்கியது.

சங்க காலத்திலேயே இதன் குறிப்புகள் காண கிடைக்கின்றன. இதை பின்பற்றுபவர்கள் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொண்டு சாம்பலில் நடனமாடி, சாம்பலில் படுத்து உறங்கி மாலைகளை அணிந்து கொண்டு லகுலீச பாசுபதம் சார்ந்த கோவில்களில் மட்டுமே இரவில் தங்குவார்கள். பல்லவர் காலத்தில் உச்சத்தில் இருந்த இந்த பாசுபத லகுலீசர் பின்னர் படிப்படியாக வலுவிழக்க தொடங்கியது. சோழர்கால அரசவைகளில் இவர்கள் ராஜகுருவாக செல்வாக்குடன் இருந்துள்ளார்கள். பரந்து விரிந்த தமிழகத்தில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட லகுலீசர் உருவங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் இதுதான் முதல் சிலை. எனவே இதை அரிதாகவே கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் கண்டறிந்த இந்த சிலையானது 95 சென்டிமீட்டர் உயரமும் 65 சென்டி மீட்டர் அகலமும் கொண்டு ஆடையின்றி சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.

இதன் தலையில் ஜடா பாரமும், இரு காதுகளில் அழகிய குண்டலங்கள், கழுத்தில் ஒட்டிய அணிகலனாக சவடியும், வலக்கையில் தண்டும், இடக்கையை தொடை மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. இடது தோள்பட்டை மேலே படம் எடுத்த நிலையில் நாகத்தின் சிற்பம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு அஸ்திவாரம் தோண்டும் போது இது கிடைத்துள்ளது. பூமிக்கடியில் பல ஆண்டுகள் இருந்துள்ளதால் சற்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

இதை ஊர் மக்கள் அம்பூரீஸ்வரர் என்கின்றனர். ஆனால் இது லகுலீசர் சிலையாகும். தமிழகத்தில் லகுலீச பாசுபத ஆய்வாளர்களும் தொல்லியல் அறிஞர்களும் ஆன மங்கை வீரராகவன் மற்றும் சுகவனம் முருகன் ஆகியோர் இதை லகுலீசர் என்பதையும் பல்லவர் கால சிலை என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார்கள். இந்த மாவட்டத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள லகுலீசர் சிலை இது என்பதாலும் கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் இந்த அரிய வரலாற்று கலை பொக்கிஷத்தை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்