டாஸ்மாக் கடையை உடைத்து 911 மதுபாட்டில்கள் திருட்டு

மதுரை அருகே டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான 911 மதுபாட்டில்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-25 19:02 GMT
மதுரை
மதுரை அருகே டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான 911 மதுபாட்டில்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை
மதுரை சிலைமான் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாமநத்தம் ஜங்சன் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக மேலக்கால் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (வயது45) என்பவர் உள்ளார். இந்தநிலையில், அவர் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே, டாஸ்மாக் கடையின் கதவு உடைந்து கிடப்பதாக வரதராஜனுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கடைக்கு உடனடியாக சென்று வரதராஜன் பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக திருட்டுபோனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கடையில் இருந்த மதுபாட்டில்களை சோதனை செய்தபோது, ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 911 எண்ணிக்கை கொண்ட மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
விசாரணை
இதுகுறித்து வரதராஜன் சிலைமான் போலீசாருக்கு தகவல் அளித்தனார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் சோதனை செய்தனர். மேலும், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதுபோல், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் பற்றி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வரதராஜன் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்