சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது- போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கவுந்தப்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-27 22:40 GMT
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கடத்தல்
கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிறுமியிடம் கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கிட்டுசாமியின் மகன் கவுதம் (வயது 20) என்பவர் பழகி வந்ததும், சம்பவத்தன்று அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
போக்சோ சட்டம்
போலீசார் விசாரணை நடத்துவது தொடர்பான தகவல் பரவியதும், கவுதம் கடத்தி சென்ற சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையம் அருகில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சிறுமியை கடத்தி சென்ற கவுதம் கோபியில் உள்ள நண்பர் வீட்டில் தங்க வைத்திருந்ததும், பிறகு ஒரு கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கவுதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வந்தனர். 
இந்தநிலையில் பெருந்தலையூர் பகுதியில் கவுதம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்றார்கள். அங்கு கவுதமை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்