ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது

சரக்குவேனில் அரிசி கடத்திய ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-29 20:04 GMT
மதுரை, 
சரக்குவேனில் அரிசி கடத்திய ரேஷன் கடை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு திருநகர் பகுதியில் ரேஷன் அரிசியை வாகனத்தில் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருநகர் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 60 மூடைகளில் 3,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த அரிசி திருநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடை களில் இருந்து கடத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வேனில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

கைது

அதில் வேன் உரிமையாளரும் டிரைவருமான ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோட்டை சேர்ந்த கண்ணன் (வயது 24), ரேஷன் கடையில் தற்காலிக ஊழியர்களாக வேலை பார்க்கும் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ரமேஷ் (35), சிந்துப்பட்டியை சேர்ந்த மூர்த்தி (38) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள்3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ரேஷன்கடை விற்பனையாளர் அண்ணாத்துரை என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்