தாளவாடியில் ரோட்டோரத்தில் வீசப்பட்டு கிடந்த 30 மூட்டை ரேஷன் அரிசி

தாளவாடியில் ரோட்டோரத்தில் வீசப்பட்டு கிடந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Update: 2021-08-07 21:04 GMT
தாளவாடியில் ரோட்டோரத்தில் வீசப்பட்டு கிடந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ரேஷன் அரிசி கடத்தல்
தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களுக்கு அரசு பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை சிலர் பொதுமக்களிடம் கிலோ ரூபாய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தாளவாடி மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு பல்வேறு நடவடிக்கைகள்   எடுத்து  வருகின்றனர். ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அவற்றை கடத்தும் நபர்களை கைது செய்து வருகின்றனர். 
30 ரேஷன்அரிசி மூட்டைகள்
இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் அதே பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோடம்பள்ளி தொட்டி கிராமம் அருகே சாலையோர முட்புதரில்  30 மூட்டைகள் கிடந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அவற்றிலும் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
 ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலைச்சேர்ந்தோர் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதை அறிந்ததும் சிக்கிவிடுவோம் என நினைத்து அவற்றை ரோட்டோரம் வீசியுள்ளனர். கைப்பற்றிய ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாளவாடி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்