தூய்மை பணியாளர்களின் குறைகள் கேட்பு ஆய்வு கூட்டம் ஆணைய தலைவர் தலைமையில் நடந்தது
தூய்மை பணியாளர்களின் குறைகள் கேட்பு ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.;
காஞ்சீபுரம்,
தூய்மை பணியாளர்களின் குறைகள் கேட்பு ஆய்வு கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் ஆணையத்தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தேசிய தூய்மை பணி ஆணையர் சார்பாக தமிழ்நாட்டுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு தங்கியிருக்கும் தூய்மை பணியாளர்கள் அதே இடத்தில் பட்டா வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் கலந்தாலோசித்து அதே பகுதியில் அல்லது அருகில் உள்ள பகுதியிலேயே இடத்தை வழங்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக பரிசீலனை செய்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு கூட்டத்தில் ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியா முழுவதும் ஒப்பந்த பணியாளர்கள் என்பதே இல்லாத வண்ணம் அமைய வேண்டும். அதே போல ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த பணியை அரசே எடுத்து செய்வதன் மூலம் அரசுக்கு கூடுதல் நிதி வர வாய்ப்பு உள்ளது. இதனால், தூய்மை பணியாளர்கள் பெருமளவில் பயனடைவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்ட ஊதிய உயர்வை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் படும் துன்பங்கள் மற்றும் பாதிப்புகளை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி குழுவை அமைக்க தமிழக அரசுக்கு தூய்மை பணியாளர் ஆணையத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுலவர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ, அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.