தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1,410 பேர் பயனடைந்தனர்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,410 பேர் பயன்அடைந்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-08-19 20:49 GMT
ஈரோடு
தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,410 பேர் பயன்அடைந்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் அளிக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா தொட்டகாஜனூர் மலை கிராமத்தில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக இந்த திட்டம் தாளவாடி தாலுகாவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. படிப்படியாக மாவட்ட அளவில் அனைத்து தாலுகாவிலும் சுகாதார மையங்கள் மூலம் அமல்படுத்தப்படுகிறது.
1,410 பேர் பயன்
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
தாளவாடி தாலுகாவில் 45 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் வீடுகளுக்கே சுகாதார பெண் களப்பணியாளர்கள் சென்று 2 மாதங்களுக்கு தேவையான மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். தாளவாடி தாலுகாவில் உயர் ரத்த அழுத்தம் உள்ள 932 பேருக்கும், சர்க்கரை நோய் உள்ள 243 பேருக்கும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ள 235 பேருக்கும் என மொத்தம் 1,410 பேர் மருந்துகள் பெற்று பயன்அடைந்து உள்ளனர்.
மேலும், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கும் இயன் முறை மருத்துவம், நோய் தடுப்பு பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சையாளர் மூலமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. வயதான கை, கால் முட்டி பாதித்து நடக்க முடியாதவர்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சையாளர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்