கொரோனா தடுப்பூசி

மதுரை நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைனின் பதிவு செய்யும் முறையை கைவிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2021-08-19 21:13 GMT
மதுரை, 
மதுரை நகர் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைனின் பதிவு செய்யும் முறையை கைவிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களபணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும், அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதை கடந்தவர்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு என்ற 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 
மதுரையில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மதுரையில், கடந்த காலங்களில் தடுப்பூசி செலுத்த அதிக அளவு மக்கள் குவிந்ததாலும், சமூக இடை வெளியை கடைபிடிக்க முடியாத காரணத்தாலும் ஆன்-லைனில் பதிவு செய்து, அதன்பிறகே தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்தது. 
அதன்படி, மாநகர பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பூசி மையங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. ஆனால், தற்போது எந்த மையங்களிலும் அதிக அளவில் கூட்டம் இல்லை. இருந்தாலும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதால், நகர் பகுதியில் உள்ள மக்கள் புலம்பி வருகின்றனர்.

மாற்றி அமைக்க கோரிக்கை

இதுகுறித்து அவர்களில் சிலர் கூறுகையில், மதுரை மாநகர பகுதியில் உள்ள மையங்களில் மட்டுமே இந்த நடைமுறை உள்ளது. இதற்காக தனியாக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு தனியார் கணினி மையங்களை நாடி செல்ல வேண்டி உள்ளது. மேலும், ஆன்லைனில் பதிவு செய்வதற்காக பல மணி நேரம் காத்து கிடந்து இதனை பதிவு செய்ய வேண்டியநிலை உள்ளது.
மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் முன்பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. கடந்த காலங்களில் தடுப்பூசி செலுத்த அதிக அளவு மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். ஆனால், இந்த நடைமுறை பயன்உள்ளதாக இருந்தது. ஆனால், தற்போது தடுப்பூசி செலுத்தும் மையங்களில் கூட்டம் அதிக அளவில் இல்லை. இப்போதும், முன்பதிவு செய்தால் மட்டுமே தடுப்பூசி என கூறுவது பொதுமக்களுக்கு சிரமத்தை தரும் வகையிலும், தேவையில்லா வேலையாகவும் உள்ளது. 
எனவே, முன்பதிவு செய்தால் மட்டுமே தடுப்பூசி என்ற நடைமுறையை மாற்றி, அருகில் உள்ள தடுப்பூசி மையத்தில் வழக்கம்போல் அதற்கான ஆவணங்களை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்