தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-08-24 21:44 GMT
ஈரோடு
தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். 
தொழில் முதலீட்டு கழகம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பெற்ற இந்த கழகம், மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முக படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.
25 சதவீதம் மானியம்
ஈரோடு பெரியார் நகர் 80 அடி ரோடு சிதம்பரம் காலனியில் உள்ள, கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு தொழில் கடன் மேளாவில் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். எனவே, இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்