மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் விபத்தில் பலி
பேரையூர் அருகே மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் விபத்தில் பரிதாபமாக இறந்தார்;
பேரையூர்
பேரையூர் அருகே மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
திருமண அழைப்பிதழ்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி சுப்புலட்சுமி(வயது 59). இவர்களுடைய மகனுக்கு திருமணம் நடக்க உள்ளது. இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, கணவன்-மனைவி 2 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இவர்கள் பெருமாள்பட்டியிலிருந்து பேரையூர்-டி.கல்லுப்பட்டி சாலையில், முக்குரோடு மீன் கடை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பேரையூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார்.
பெண் பலி
அப்போது இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக இரண்டும் மோதியதில் சுந்தரம், சுப்புலட்சுமி ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் சுப்புலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சிகிச்சைக்காக சுப்புலட்சுமி பேரையூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சுப்புலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுப்புலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.