கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக நீடிக்கிறது; விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-08-26 21:11 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன பகுதியை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், கீழ்பவானி வாய்க்காலில் செல்லும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
100 அடியை எட்டியது
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 25-ந் தேதி மாலை 4 மணி அளவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. பவானிசாகர் அணையை பொறுத்தவரை மழைக்காலத்தில் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி வரை 100 அடி வரை தண்ணீரை தேக்கலாம்.
ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை 102 அடி வரை அணையில் தண்ணீர் தேக்கலாம். அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரை தண்ணீர் தேக்கலாம். இதனால் கடந்த மாதம் 25-ந் தேதி பவானிசாகர் அணை 100 அடியை எட்டியதும் பவானி ஆற்றின் வழியாக உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப உபரிநீர் திறப்பு கூட்டி குறைக்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு மேல் 100 அடி
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து 100 அடிக்கு மேல் இருந்து வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 637 கன அடி தண்ணீர் வந்தது.
அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கனஅடியும், குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்