தலைகவசம் அணியாத சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்

மோட்டார் சைக்கிளில் சென்ற போது தலைகவசம் அணியாத சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதித்து போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-08-27 20:33 GMT
மதுரை,

மோட்டார் சைக்கிளில் சென்ற போது தலைகவசம் அணியாத சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதித்து போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

தலைகவசம் அணிய அரசு உத்தரவு

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அணியாமல் செல்பவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து மதுரை நகரில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணியாமல் செல்பவர்கள் மீது போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் பலர் தலைகவசம் அணியாமல் செல்வது தொடர்பாக போலீஸ் கமிஷனருக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதை தொடர்ந்து தலைகவசம் அணியாமல் செல்லும் போலீசார் மீதும் அபராதம் மற்றும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு கமிஷனர் உத்தரவிட்டார். இது குறித்து அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்

அதை தொடர்ந்து நகர் முழுவதும் தலைகவசம் அணியாமல் செல்லும் போலீசார் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை திலகர்திடல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் அன்பழகன் தலைகவசம் அணியாமல் ஆயுதப்படை குடியிருப்பு நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போக்குவரத்து துணை கமிஷனர் ஈஸ்வரன் அதை பார்த்து அவருக்கு அபராதம் விதிக்க தல்லாகுளம் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவருக்கு போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.மேலும் கடந்த 5 நாட்களில் இதுவரை நகரில் 30-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர மோட்டார் சைக்கிளில் சைலன்சரை மாற்றி அதிக சத்தத்துடன் செல்லும் வண்டிகள் மீதும் அபராதம், வழக்கு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்